அக்கமாதேவியின் மல்லிகார்ஜூன தரிசனம்

பல நல்ல விஷயங்கள் மிகத் தாமதமாகத்தான் வந்து சேர்கின்றன. அப்படி வந்து சேர்ந்தனவற்றுள் ஒன்று இந்த வசனகவிதையும், பாடலும்.

பண்டிட் வெங்கடேஷின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்தப்பாடலும் எழுந்துவந்தது . கன்னடத்தில் இருந்தாலும், ஒரு வசன கவிதை போல மிக நேர்த்தியாக இருந்தது.

தேடிப்பார்த்தபோது அது அக்கமாதேவி எழுதியது என்று தெரிந்தது. அக்கமாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்துறவி – கவிஞர். ஸ்ரீசைலத்தில் கோவில் கொண்டுள்ள மல்லிகார்ஜூனர் எனும் சிவ வடிவை தன் கணவராகவே கருதி அவர் மீது 430 வசன கவிதைகளை இயற்றியிருக்கிறார்.

அவற்றில் ஒன்றுதான் நான் முதலில் கேட்ட இந்த ”அக்கா கேளவா” எனும் அற்புதம். இதன் தோராயமான மொழிபெயர்ப்பு மட்டும் கீழே. மல்லிகார்ஜுனர் மீதான அன்பைப்பொழியும் அக்காவின் வரிகளுக்கு இது சற்றும் ஈடாகாது என்றாலும், நான் புரிந்துகொள்ளும் பொருட்டு எழுதிய எளிய வடிவம் மட்டுமே.

*

அக்கா கேள்!
அரிய கனவொன்றினைக்கண்டேன் கேள்!

அவனிடம்
அரிசி, வெற்றிலை பாக்கு
பனைஓலை, தேங்காய்
யாவும் இருந்தன.
சிற்சில சடைகளுடனும்
செரிந்த பற்களுடனும்
கொரவன் ஒருவன்
தானம் கேட்பதைக்கண்டு
மிகுந்த தாபத்தோடு அவனைத்தொடர்ந்து
அவன் கைத்தலம் பற்றினேன்

சென்ன மல்லிகார்ஜூனனைக்கண்டவுடன்
கண்மலர்ந்தேன்!

*

Leave a comment