குமாஸ்தா பணியும், எரிச்சலும்

சிறிய வயதிலிருந்தே குமாஸ்தா பணியில் இருப்பவர்களுக்கு கூடேயே இருக்கும் ஒருவித எரிச்சலை பார்த்தே வளர்ந்திருக்கிறேன். அரசுப்பணியில் இருப்பார்கள், நல்ல சம்பளம் இருக்கும், கடினமான பணி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாத, புதிதாக ஒன்றை உருவாக்குகிற கிரியேட்டிவ் பணிகளாகவும் இருக்காது. ஆனால் பணி சார்ந்து எரிச்சல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நிறைய யோசித்திருக்கிறேன் ஏன் இந்தப்பணிக்கு இவ்வளாவு எரிச்சலென்று. புதிரான பகுதியாகவே இருந்தது இது நாள் வரைக்கும்.

கடந்த இரு நாட்களாக அலுவலகத்தின் இப்போதிருக்கும் ஒரு ப்ராஜக்டின் உரிமையாளருக்கு அவருடைய கனடா installers க்கென இருக்கும் இணையச்செயலியை புதிதாக வடிவமைக்கும் ஒரு POC பணி. சற்றே பெரிய பில் என்பதாலும், ப்ராஜக்ட் நமக்கே கிடைக்க வேண்டுமென்பதாலும் குழுவில் பணிகளை பங்கிட்டு எல்லாருமாகச்செய்கிறோம்.

அதில் இப்போது இருக்கும் மென்பொருளில் இருக்கும் ரிப்போர்ட்களைத்தொகுக்கும் பணி எனக்கு வந்தது. இப்போதைய மென்பொருளில் இருக்கும் ரிப்போர்ட்களை தொகுத்து ஒரு word கோப்பாக மாற்ற வேண்டும். மேலோட்டமாக எளிதான பணியாகத்தோன்றினாலும் அவர்களிடம் இருக்கும் 500+ ரிப்போர்ட்களை படியெடுத்து விபரங்கள் எழுதி அதனை கோப்பாக மாற்றிய இந்த இரண்டு நாட்களும் எரிச்சலின் உச்சத்தில் இருந்தேன்.

எந்த கிரியேட்டிவ் பிராசஸும் இல்லாத இந்த வெட்டி ஒட்டல் பணி அவ்வளவு அழுததத்தையும், கடும் மன உளச்சலையும், முதுகு வலி முதலான இத்யாதிகளையும் எளிதில் கொண்டுவந்தது.

”சும்மா இருக்கறது ஒண்ணும் அவ்வளவு ஈசி இல்லை” என்று சொன்ன வடிவேலுவும், எளிய பணி செய்வதற்கு ஏன் எரிச்சற்படுகிறார்கள் என்றெண்ணிய என் சிறுவயது குமாஸ்தா மாமாக்களும் கண்முன் தோன்றினார்கள்.

எப்போதும் வாழ்வில் இக்கரைக்கு அக்கரை பச்சையாகவேதான் இருக்கிறது.

Leave a comment