(Geisha – A Japanese woman trained to entertain men with conversation and singing and dancing)
இளமையில் வறுமை மட்டும் கொடுமை அல்ல மனவெறுமையும்தான் என்பதனை நாம் வாழ்க்கைபாதையெங்கும் உணர்ந்துகொண்டேதான் இருக்கின்றோம். தந்தை தாயின் அன்பில் உழன்று, உறவினர்களின் அன்பினில் திளைத்து , நல்ல கல்வி கற்று, நன்கு உண்டு விளையாடி இளமையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவித்து வாழும் வாழ்வு ஒரு புறம். இவை அத்தனையும் இல்லாமல் வறுமையும் வெறுமையும் துரத்த போராட்டங்களையே தனது அனுதின வாழ்க்கை நிகழ்வுகளாக கொண்ட பெண்ணின் பாதச்சுவடுகள்தான் இந்த திரைப்படம்.
ஒரு சிண்ட்ரெல்லா கதை போலதான் தோன்றியது DVD யின் மேலட்டை விமர்சனத்தை படித்தபோது. பொழுது போக்க வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தினை பார்க்க முனைந்தேன். ஆனால் முற்றிலும் நிறைவான அனுபவத்தை அளித்தது.

இத்திரைப்படத்தின் பெயரையே தலைப்பாக கொண்ட “ஆர்த்தர் கோல்டனின்” நாவலே இதற்கு மூலம். ஒரு கடற்கரையோர கிராமத்தின் மழைக்கால மாலைப்பொழுதில் ஆரம்பிக்கிறது திரைப்படம். (இந்த ஒரு காட்சிக்காகவே சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருது கொடுத்துவிட்டார்கள் போலும்…!) வறுமையில் வாடும் மீனவ குடும்பத்தின் தந்தை தனது மகள்களை நகரத்தில் உள்ள geisha இல்லத்திற்கு விற்கிறார். அவர்களில் இளையவளான “சியோ சேன்” 9 வயதில் தனது சகோதரியின்றும் பிரிக்கப்பட்டு இனம் புரியாத அனுபவங்களை வாழ்வில் சந்திக்கிறாள்.
அங்கிருந்து தப்பிக்க முயன்று இல்லத்தின் மூத்த பெண்மணியின் வெறுப்பைப் பெறுகிறாள். அவளை அடிமை போல உழல வைக்கின்றனர் அந்த geisha இல்லத்தில் அனைவருமே. வாழ்வே மிகவும் துயரமானது என்ற எண்ணத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நாளில் “சேர்மேன்” என்று அனைவராலும் அழைக்கப்பெறும் அன்பான உள்ளம் கொண்ட மனிதரை சந்திக்கிறாள்.“வாழ்வில் துயரம் என்பது தற்காலிகமானது, மகிழ்வு ஒரு நாளில் அனைவரையும் தழுவிக்கொள்ளும். சற்று தொலைவில்நின்று கொண்டிருக்கும் ஒரு geisha வை சுட்டிக்காட்டி அவளும் துன்பங்களால் ஒரு காலத்தில் அவதிப்பட்டிருக்கிறாள் என்றும் தற்போது அவளின் மகிழ்வான முகத்தை பார்” என்றும் மிக உற்சாகமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப்போகிறார்.

சில நிமிடங்களே ஆயினும் அந்த அனுபவம் அவள் வாழ்வையே புரட்டிப்போடுகிறது. சேர்மேன் அவளது இரவு உணவுக்கென கொடுத்த உணவை கோவிலில் காணிக்கையாக்கி என்றேனும் ஒரு நாள் தான் ஒரு geisha ஆக வேண்டும் என்றும், தான் மகிழ்வாக இருக்கும் இன்னொரு தருணத்தில் சேர்மேனை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறாள். நம்பிக்கையோடு வாழும் அவளுக்கு பலனும் கிடைக்கிறது.
அவள் எவ்வாறு ஒரு சிறந்த geisha வாக mould செய்யப்படுகிறாள், அவள் எத்தகைய கணத்தில் சேர்மேனை சந்திக்க நேரிடிகிறது என்பதையெல்லாம் ஒரு கவிதை போன்று சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட , சிறந்த இசைக்கோர்வு செய்யப்பட்டகாட்சிகள் மூலமாக மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றிருக்கிறது. Best cinematography,Best costume design,Best Art Direction ஆகிய மூன்று பிரிவுகளில். ஆனால் ஒளியும், இசையும் கலந்து உறவாடும் நிறையா காட்சிகள் நம் கண்ணை விட்டு அகலாமலே இருக்கின்றன. சிறந்த இசைக்கோர்ப்பிற்கும் விருது அளித்திருக்கலாமோ என்ற எண்ணம் இருக்கிறது. மிக சிறந்த அனுபவத்தை அளித்த திரைப்படம். கட்டாயம் உலக சினிமா ரசிகர்கள் ஒரு முறை பார்க்க வேண்டியதும் கூட.

Director: Rob Marshall
Writers : Robin Swicord (screenplay) , Arthur Golden (book)
Music John Williams
Cinematography Dion Beebe
Editing – Pietro Scalia
Costume Designs – Colleen Atwood

Leave a comment