அம்மாவிற்கு ஒரு மகளின் கடிதம்
அன்பு அம்மா!
மூன்று மாதங்களாக என்னிடமிருந்து கடிதம் வராதது உங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மன்னித்துவிடுங்கள். நான் இப்போதுதான் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்திருக்கிறேன். அதுதான் காரணம்.
மருத்துவமனை என்றதும் பதறவேண்டாம். நான் நலமாகத்தான் இருக்கிறேன். என்னால் இப்போது எந்த கைப்பிடியின் துணையும் இல்லாமல் சில நேரங்களில் நிற்க கூட முடிகிறது. இது தவிர லேசான மயிரிழை எலும்புமுறிவு, பின்னந்தலையில் ஆழ்ந்த ஒரு காயம் தவிர வேறு ஒன்றும் இல்லை. எனது ஹாஸ்டல் கட்டிடம் தீபற்றிக்கொண்டபோது இரண்டாவது மாடியிலிருந்து குதிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது.
ஆனால் நீங்கள் கவலைப்படவேண்டாம், என்னை பரிசோதனை செய்யும் டாக்டர் “விரைவிலேயே நான் யாருடைய துணையும் இன்றி மீண்டும் நடக்க இயலும்” என்று கூறியிருக்கிறார்.
ஒன்று சொல்லவேண்டும் என்னுடைய இந்த நிலை மேலும் கவலைக்கிடமாகியிருக்ககூடும் எங்கள் ஹாஸ்டல் வாசலில் டீகடை நடத்திக்கொண்டிருக்கும் முனுசாமி மட்டும் இல்லாமல் போயிருந்தால். ஆமாம். கிட்டத்தட்ட சாவை நோக்கிச்சென்று கொண்டிருந்த என்னை அவன்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். மிகவும் உதவியாக இருந்தான். என்னை கனிவுடன் கவனித்துக்கொண்டான்.
இப்போது கூட என்னுடைய ஹாஸ்டல் கட்டுமானப்பணிகள் முடிய காலதாமதம் ஆவதால் நான் அவனுடன்தான் தங்கியிருக்கிறேன். அவனுடைய குடிசைதான் எத்தனை அழகானது தெரியுமா அம்மா?
இன்னொன்றும் சொல்ல வேண்டும் அம்மா. கடந்த சில மாதங்களாக நான் அவனை அல்ல அவரை காதலிக்கவும் ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு பிடித்த அவரை நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னை விட இருபது வயது மூத்தவராக இருந்தாலும் நம்முடைய ஜாதி, மதம் முதலாவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருந்தாலும் அதெல்லாம் உங்களைப்பொறுத்த வரையும் சற்றும் பெரிய விஷயமாக இருக்காது என நம்புகிறேன் அம்மா. சரிதானே.
அவருடைய மனைவியும், மூன்று மகள்களும் என் மீது எவ்வளவு பாசத்தை பொழிகிறார்கள் என்பதைப் பார்த்து நிச்சயம் நீங்கள் பரவசப்படத்தான் போகிறீர்கள்.
நீங்கள் நினைக்கலாம் ஏன் இத்தனை நாட்கள் கழித்து இப்போது இதனை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்று? கோபப்படாதீர்கள் அம்மா. நாங்கள் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொள்வதென்று முடிவு செய்தோம். ஏனென்றால் என்னுடைய குழந்தை இந்த உலக்த்தை பார்க்கும்போது அதற்கு முறையான முதலெழுத்து இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆம் அம்மா. நீங்கள் பாட்டியாகப் போகிறீர்கள். Congratulations!.
நீங்களும், அப்பாவும் இந்த செய்தியினால் மிகவும் மகிழ்ந்து எங்களைப்பார்க்க மிசோரம் மாநிலத்தில் இருக்கும் அவரது கிராமத்திற்கு வருவீர்கள் என்று காத்திருப்பேன். வருவீர்கள்தானே!
ok ம்மா. மேலே சொன்ன எந்த நிகழ்வுமே உண்மை இல்லை. தீ விபத்து, முனுசாமி, மிசோரம் எதுவுமே!
நான் இந்த செமெஸ்டருக்கான கணித பாடத்தில் “கப்” வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்.
உன் செல்ல மகள்.
____________________________________________________________
“Beautiful Mind” என்ற மாத சஞ்சிகையில் (2004 ஏப்ரல்) வந்த ஆங்கிலக்கடித்தின் தமிழாக்கம். (ஆங்கில author unknown, தமிழாக்கம் நானே!)
இந்த பத்திரிக்கை UAE ல் கிடைப்பதில்லை. இந்தியாவில் இப்போதும் வெளி வந்து கொண்டிருக்கிறதா? இணையத்தில் தகவல் கிடைக்கவில்லை.

Leave a comment